என் இனிய முட்டாள்களே!

திங்கள், 31 ஆகஸ்ட், 2009
என் இனிய முட்டாள்களே!
சாதிகளுக்கு...
சாம்பிராணி போடாதீர்கள்!
மனிதத்தை மறந்து...
மதத்தில் மூழ்காதீர்கள்!

கோயில் -மசூதி- தேவாலயம் சுற்றும்
மாடப்புறாக்கள் எல்லாம்
மதம் பார்ப்பதில்லை!
அதற்குத் தெரியும் ..

இருப்பது...
ஒரு கடவுள்!

பிரித்தது..
பல மனிதன் என்று!


லெப்பைக்கு காய்ச்சல் என்றால்...
பாதிரியாரும்,
பூசாரியும் ,
ஓடிவரட்டும்!
பேதம் பார்க்காத ...
புறாக்களைப்போல!

ஜானின் ...
சாவுச்செய்தி கேட்டு
கண்ணன்கள் ...
கதறி அழட்டும்!
ஜாகீர் உசேன்கள்...
சவப்பெட்டித் தூக்கட்டும்

இறைவா!
சாதி மத வெறியர்களை
சுத்தப்படுத்துவதற்காய் ஒரு
சுனாமியை அனுப்புவாயா..?

இனிமேல்
யானைக்கு கூட
மதம் பிடிக்கக்கூடாது!